Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

பட்டியல் பெருத்தவள்

முதல் முத்தம்
முதல் பார்வையென
எதுவுமே இல்லை எங்களிடத்திலே,
எப்போதோ
நான் வலிந்து தந்த முத்தத்தின் ஈரத்தின்
இறுதிக் கதகதப்பையும் உன் கன்னங்களில்
இருந்து எடுக்க இப்போது வரை போராடிக்கொண்டிருக்கிறாயேமே?
அது உன் கையோடு போகையில்
இனி எப்போதும்
எப்போதுமே...
உன்னால் பெறமுடியாத
முத்தம் அது என்பதை உணர்வாய்.

உன்னிடமும் என்னிடம் எங்களின்
புகைப்படங்கள் எதுவுமில்லை.
காதலுக்கு அவை சாட்சிகளில்லைத்தான்
ஆனால் என் புகைப்படமாவது உன்னிடமிருந்திருக்கலாம்
எனினும்
பராவாயில்லை என்னிடம்
பாழாய் போன சில நினைவுகள்
இருக்கின்றது.
உன்னிடம் என் நினைவாய் என்ன
எஞ்சப்போகின்றது?

உனக்கென ஒரு கவிதை எழுத
நினைத்திருந்தேன்.
என்னிடம் இருந்த எல்லா வார்த்தைகளுக்கும்
சொந்தக்காரியாக நீயே இருந்த போது
அது எழுதப்படாமலே போயிற்று.
உனக்கு தானே அன்பே என்பதும் ஆருயிர் என்பதும்
பிடிக்காது என்பாயே..
நான் ஒரு முட்டாள்
என் வாயிலில் எது வந்தாலும்
உனக்கு அது
பிடிக்காது என்பதின் மறுவார்த்தை அது
என்பதை புரிந்துக்கொள்ள தவறினேனே?
இப்போதும் பார்,
என் துரதிஸ்ரம், எனக்கும் உனக்குமான இந்த
கவிதையை நான் எழுதுகையில்
வாசிப்பவன் நான் மட்டுமாய் இருக்கின்றேன்.

நான் எப்போதாவது உன்னிடம் வியாபாரியாக
நடந்ததில்லையே..
ஒரு பண்டமாற்றுக் காலத்தவன் போல்
என்னிடம் இருக்கும் எல்லாப் பிரியங்களையும்
உன்னிடம் தருகின்றேன்.
உன்னிடம் இருக்கும் எல்லா பிரியங்களையும்
எனக்குத் தா என்றேன்.

மரணத்தின் மறுவாசல் நீயே
என்றாலும் இன்று வரை அதில்
நுழையவே விரும்புகின்றேன்.
இப்போதும் என்னை எரியும் என்னை
அணைப்பதற்கு
ஏதேனும் ஒரு வார்த்தையுடன் என்னிடம்
வருவாய் என்ற நம்பியிருக்கின்றேன்.

உன் பிரியங்களின் பட்டியலில் என் பெயர்
தேடியே அலைந்த அயாசம்
இருக்கிறதெனினும்
ஒரே ஒரு கேள்வி உன்னிடம் கேட்க இருக்கிறது
என்னிடம் உனக்கு காதல் வந்த போது
உன் பட்டியலில் நான் எங்கிருந்தேன்?

வடக்கின் சேதிகள்


(அடியும் முடியும் இல்லாக்கவிதை)

நாட்கள் வந்துவிட்டன.
தடவும் கரங்கள் எதுமற்று
நான் நிற்கையிலும்
எனைச் சூழ்ந்து முழ்கடிக்க
துயரத்தின் சேதிகள்
காதுக்கெட்டின.
தோன்றிட உருவங்கள்
எதுவுமற்று,
தனித்தே கிடக்கிறதாம்
என் வீட்டு
நிலைக்கண்ணாடி

இனி என்ன எம் கனவுகளிலும்
சிருங்கார ரசம் வழியும்
நடனங்களை மறப்போம்.
எதுவுமற்ற ஊரினில்
நாய்களின்
ஊளையே கீதங்களென
எண்ணி இருப்போம்.

நான் தொலைக்கும் நான்


என் நடைபாதையில்
முன்னும் பின்னுமாய்
ஆகி
எந்த வீதியில் நான் நடக்கையிலும்
நிழலாய் இருந்தென்னை
குற்றம் கண்பதாய்
ஆரம்பிக்கிறது
உங்களின் தத்துவங்கள்.

சுளுக்குப் பிடித்துப் போன
உங்களின் கழுத்தின் பார்வைத்திசையில்,
விதிகளை வரையும் உங்கள்
கரங்களின் கதியில்,
எங்குமே...
சக்கடை சலசலத்து ஓடுவதாய்
தோன்றுகிறதெனக்கு.
அதுதான் உங்கள் சங்கீதம் எனில்
நிச்சயம் எனக்கது
நிம்மதி தருவதாய் இல்லை.

என் அடையாளங்கள்
உங்களை பிணத்திற்கலையும்
மிருகங்கள் ஆக்குகிறதெனில்

உயிரில் உள்ள இறுதி
மூச்சையெறிந்து,
நாகரிகம் பெறா..
மொழிகளறியா தேசத்தில்
போய் விழுவேன்.

அங்கே
பாதம் தொடும் சடை வளர்த்து
மரப்பீப்பாய்களில் நிறைந்திருக்கும்
மதுவை ஏந்தி
கடைவாய்களில் வழிய
முன்னிருப்பவனின் முகமதில்
உமிழ்ந்து பின்தொடரும்
பொழுதின் இரத்தம் வழிந்து
களைப்புற்று இருக்கையிலே..

மங்கல் வெளிச்சமதில்
அரைகுறையை அவிழ்ந்துப்போட்டாடும்
தடித்த உதடுகள் பொருந்திய
ஒருத்தியை
பிடித்துப் புணர்ந்து ஒரு பிள்ளை
செய்வேன்
“அம்மா” என்னும் சொல் அறியமாலே...

நான் முற்றத்தில் இருக்கிறேன்.


அம்மா நான் முற்றத்தில் இருக்கின்றேன்.
மழை கிளறும் மண்வாசனையையோ
இலைகளிடை தெரியும் நிலவினையோ
நான் ரசித்தபடியில்லை.

என் மரணத்திற்கான அழைப்பு
தெரு முடக்குக்கு வந்துவிட்டது.
நாய்களின் குரைப்புகளை தாண்டி
எழப் போகும் ஓரோசையை கேட்டபடியே
நீ உள்ளிருப்பாய்....

எனக்கான உன் ஆயிரம்
நேர்த்திகள் தோற்றுவிட்டதாய்
அப்போது உணராதே...

என் பிறப்பை போலவே
என் வாழ்வும் இப்போது உனக்கு
எனக்கும் வரமாயிருக்க
நேர்ந்ததே..

இருள் கவியும் பொழுதுகளில்
நான் காவி வந்தவைகளை அறியாமலே
நீ பிட்டு அவித்த படியிருப்பாய்.

என்னை சூழ்ந்த உன் கற்பனைகளையும்
காலையில் ஒலித்த கோவில் மணியையும்
அப்பாவின் தேவாரங்களையும் தாண்டியே
நாங்கள் போனோம்.

நேற்று வந்த பொழுதுகள் எமை கவ்வி
நாளை எழுத அழைத்திற்று.
காற்றைப் போலவும், நீரைப்போலவும் நெருப்பைப்
போலவும் எமையுணர்ந்தோம்.

கட்டைகள் கிழித்தறிந்த காயத்தை
ஒரு துணியில் மறைத்த போதுவுன்
சேலைச் சூட்டை மறந்தோம்

கசகச இருட்டினில் உன்னை அழைத்து,
பிட்டை தின்றபடியே அழுமுன் கண்களில்
முன் எங்கள் இலட்சியங்கள் கூறி நின்றோம்.

உன் நேர்த்திகள் பலித்ததாய் கொண்டாடும்
பொழுது நேற்று வாய்த்ததுனக்கு,
இன்றிரவும் பிட்டை தின்றபடி சொல்ல
இலட்சியங்கள் எதுவும் என்னிடம் இல்லை
என்றாலும்..

இவரென்றும் அவரென்றும் அறியாதவர்
என்னை உடல் என்று ஆக்கும் போது,
கூச்சலிடாதே, கத்தியழதே, வெளியே வராதே.
இன்னும் நீ
இன்னொருத்திக்கும் நேர்த்தி
வைக்கவும்
விரதம் இருக்கவும் வேண்டியிருக்கிறது
அம்மா.

My Blog List