வடக்கின் சேதிகள்


(அடியும் முடியும் இல்லாக்கவிதை)

நாட்கள் வந்துவிட்டன.
தடவும் கரங்கள் எதுமற்று
நான் நிற்கையிலும்
எனைச் சூழ்ந்து முழ்கடிக்க
துயரத்தின் சேதிகள்
காதுக்கெட்டின.
தோன்றிட உருவங்கள்
எதுவுமற்று,
தனித்தே கிடக்கிறதாம்
என் வீட்டு
நிலைக்கண்ணாடி

இனி என்ன எம் கனவுகளிலும்
சிருங்கார ரசம் வழியும்
நடனங்களை மறப்போம்.
எதுவுமற்ற ஊரினில்
நாய்களின்
ஊளையே கீதங்களென
எண்ணி இருப்போம்.

யாழ்.ஜீவநதி பற்றிய பார்வையும், செங்கை ஆழியான் சொல்லும் "தமிழ்நாட்டு அப்ளாசும்"


யாழில் இருந்து ஜீவநதி என்னும் பெயரில் கலை இலக்கிய ஏடு ஒன்று வெளிவரத் தொடங்கியுள்ளது. இரு மாதங்களிற்கு ஒரு முறை வரும் இந்த சஞ்சிகையின் இரண்டாவது சஞ்சிகை கிடைத்தது. அடுத்த வேளை சாப்பாட்டிற்கும், மருந்து பொருட்களிற்கும், கப்பலை எதிர்பார்த்துக்கொண்டும், மாலை ஆறு மணிக்குள் அடங்கி போகின்ற நாட்களையும், கொலைகள் நிறைந்த பகல்களையும் கொண்ட யாழில் இருந்து இன்றைய சூழ்நிலையில் இந்த “ஜீவநதியின்” வருகை ஆச்சரியத்திற்குரியதொன்று. ஒரு சில மாதங்களிற்கு முன்னர் படித்த செய்தியில் உதயன் நாளிதழ் வெளியிட ஏற்பட்ட தாள்களின் தட்டுப்பாட்டால் குறைவான பிரதிகள் அச்சிடப்பட்டு கடை வாசலில்களில் ஒட்டப்பட்டு படிக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டு இருந்தது. ஒரு பிரதான பத்திரிகையொன்றிற்கே இந்த நிலை ஏற்படுகின்றதை பார்த்துக் கொண்டு இப்படியான சஞ்சிகையை தொடக்குவதற்கு அவர்களிற்கு ஏற்பட்ட துணிவை நினைக்க நினைக்க மீண்டும் பாராட்ட தோன்றுகின்றது. அவர்களிற்கு அந்த சஞ்சிகையை விலை கொடுத்து வாங்குவதையும், இன்னும் ஐந்தாறு பேருக்கு அறிமுகத்தை செய்வதை தவிர பெரிதான உதவி ஒன்றையும் நாங்கள் இப்போது செய்து விட முடியாது தானே.

யாழ்ப்பாணத்தில் நான் படித்துக் கொண்டிருந்த போது ஏராளம் சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தன. அப்போதும் இதே கஸ்டங்கள் இருந்தன. ஆனால் உயிருக்கு பயம் குறைவாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தில் இடைவேளையில் வகுப்பறைக்கே நெம்பு, நங்கூரம், சாளரம், வரதரின் அறிவுக்களஞ்சியம், விளக்கு, வெளிச்சம், உலகஉலா என பல இதழ்கள் வரும். புது இதழ்களை தேடி நாங்கள் போவதில்லை. அது வகுப்பறைக்கே வரும். இப்போது எப்படியோ தெரியாது.

ஜீவநதியும் நிறைவாக வந்திருக்கின்றது. கவிதைகளை சோ.ப, கல்வயல்.வே.குமாரசாமி, த.ஜெயசீலன், ச.நிரஞ்சனி, எழில்வேந்தன், த.அஐந்தகுமார்,ஏ. இக்பால், இ.சு.முரளிதரன், யோ. யோகானந்தி ஆகியோர் எழுதி இருக்கின்றார்கள். இவை மரபு, புதுக்கவிதைகள் என பலவாயும் வந்திருக்கின்றது. த. அஐந்தகுமாரின் சொற்கள் பற்றி இரு கவிதைகள் என்னை கவர்ந்தது.

சொற்கள் பற்றிய இரு கவிதைகள்.

எச்சில் விழுங்கு
இன்னும் விழுங்கு
தொண்டைக் குழிக்குள்
துள்ளிக் குதித்து
எட்டாது களைக்கும்
சொற்களின் கவலை
நாளெல்லாம்
உன் முகத்தில்
எழுதப்பட்டு கிடக்கட்டும்.
----------------------------------------


என்னைச் செரிக்கும்
வலிகளின் நிமித்தம்
சொற்கள் வரமுடியாது
மௌனம் பிசைகிறது
புகைச்சுருளாய்
காற்றைத் தழுவி நிற்கும்
தனித்து விடப்பட்ட
‘சொற்கள்’
சுயமைத்துனத்தின்
அந்தரங்கமாய்
‘என்னோடு’
மட்டுமே புரள்கின்றது.

சிறுகதைகளை அநாதரட்சகன், மயூரரூபன், குந்தவை ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். மேலோட்டமாக மூன்று சிறுகதைகளும் நன்றாகவே இருக்கின்றன. இருந்தும் இவை பற்றிய சில எண்ணங்கள் எனக்குண்டு. அநாதரட்சகனின் ‘மனச்சிறை’ என்னும் சிறுகதை கணவனை தொலைக்கும் மனைவியின் எண்ணங்களும், இறுதியில் மாமியார் அவளை ராசியில்லாதவள் என்றும், அவள் வந்த பிறகே தன் மகன் தொலைந்தாக பேசுவதாகவும் முடிகின்றது. இரண்டு பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்த சிறுகதையில் ஒரு விஷயம் கணவன் தொலைவது. யாழ்ப்பாணம் ஒரு நாளைக்கு எத்தனை இளைஞர்களைத் தொலைக்கின்றது. அவர்களின் மனைவி, குழந்தை, உறவுகளின் நிலை எப்படி இருக்கும்?

இவர்களின் பிரதிநிதியாய் கதையின் நாயகி வருகிறாள் என்றே நான் முதலில் நினைத்தேன். ஆனால் கதை அவள் பெண் என்ற ரீதியில் எழும் இன்னொரு புதிய பிரச்சனைச் சொல்லி முடிகின்றது.

உண்மையில் இரண்டுமே பெரிய விஷயங்கள். ஒரு மனிதனின் தொலைவு எவ்வளவு பெரிய விஷயம்? பல வருடங்கள் அந்த மண்ணிலே வாழ்ந்தவர்கள் ஒரு சில மணிநேரங்களில் காணாமல் போவதும், அதற்கு எந்தச் சலசலப்பும் இல்லாது சமூகம் அடுத்த நாளை நோக்கி இருக்க, ஒரு தனி மனுசியாய் அவள் எதிர்கொள்ளும் வேதனையின் உச்சம் இந்த கதையில் இல்லை எனவே நினைக்கிறேன். சில வேளை கதை ஆசிரியருக்கும் அது அங்கு ஒரு சாதாரணமாய் போனதின் விளைவாய் அதன் வீரியம் சரியாக எழுத்தில் வரவில்லையே என்னவோ.

மயூரரூபனின் வைரவர் உலா என்னும் சிறுகதையின் நடை நன்றாக இருக்கின்றது. ஆனால் இராணுவத்தினரை நாய் என்றும் பேய் என்றும், மாடு என்றும், வைரவர் என்றும் உருவகப்படுத்துவது கடந்த பத்து பன்னிரண்டு வருடங்களில் வன்னியில் இருந்து எழும் இலக்கியங்களில் காணப்படும் ஒரு போக்கு. அது வாசிக்கையில் ஒரு வித சலிப்பை தர முனைக்கின்றது. ஆனால் மயூரரூபன் இதே நடையில் இன்னும் நல்ல சிறுகதைகளை தரமுடியும்.

குந்தவையின் "சொல்லமாட்டாளா?" என்னும் சிறுகதை நன்றாகவே இருந்தது. சில வரிகளிற்கான இடைவெளிகள், மேற்கோள் குறிகள் சரியான இடத்தில் இடம்பெறாமை வாசிக்கையில் சிறு கரைச்சல் தரப்பார்க்கின்றது. அது ஒரு அச்சகப் பிழை.

கட்டுரைகளை செ.திருநாவுக்கரசு, அம்மன்கிளி முருகதாஸ், மௌனகுரு, தெணியான், கி.நடராசா, பரணி, க.திலகநாதன், பா. அகிலன், லம்போதரன் ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள்.

மௌனகுருவின் கூத்துக்கலை செயற்பாடுகளில் ஒரு சாஸ்திரிய இசைக்கருவியான மிருதங்கத்தை இசைத்தவரான இரத்தினம் மாஸ்டர் பற்றிய கட்டுரை நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒன்று. அதே போல் தெணியான், பா.அகிலன், லம்போதரன், என ஏனைய கட்டுரைகளும் கவனிக்கத்தக்கவை.

நேர்காணலில் செங்கை ஆழியானின் நேர்காணல் வந்திருக்கின்றது. கேள்விகளும் கனமானவையே. இங்கே ஒரு கேள்வியும் பதிலும் தருகின்றேன். எனக்கு செங்கை ஆழியான் என்ன சொல்லுகிறார் என்று சரியாக விளங்கவில்லை.

கேள்வி - இலக்கிய உலகில் புலம்பெயர் இலக்கியங்கள் காத்திரமான பங்கினை வகிக்கின்றன. புலம்பெயர் இலக்கியம் குறித்துத் தங்கள் கருத்தென்ன?

புலம் பெயர் இலக்கியங்கள் இன்று முதன்மை பெற்று வருகின்றன. புலம் பெயர் இலக்கியங்கள் இருவகையான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. ஆரம்ப கால இலக்கியங்கள் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் இருந்தன. ஈழத்தில் தம் அனுபவங்களையும் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவை பேசின. பின்னர் அவர்கள் ஈழம் பற்றி எழுதியவை பார்வையாளரின் குறிப்புக்களாக இருந்தன. ஈழத்தின் துயரங்களை இன்றைய வாழ்வியலை இத்துயரங்களுக்கிடையில் வாழாமல் பதிவு செய்ய முடியாது. பட்டினி தேசமாக மாறிவிட்ட யாழ்ப்பாணத்தின் துயரங்கள் தெரியுமா? தீ விட்டெரியும் கிழக்கின் அவலங்களைக் கற்பனையில் காணமுடியுமா? நாசி முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படும் அவலங்களை அனுபவிக்க முடியுமா? வீதிகளில் அவமே செத்துக் கிடக்கும் இளைஞர்களின் சடலங்கள் வெளியிடும் கனவுகளை உணர முடியுமா?
இன்னமும் எவ்வளவு காலத்திற்குத் தான் கேள்வி ஞானங்களையும் தம் முன்னைய அனுபவங்களையும் வைத்து எம்மவரின் தாங்கொணாத் துயரங்களைப் புனைகதைகளாகவும் கவிதைகளாகவும் வடித்து தமிழ்நாட்டின் அப்ளாஸைப் பெறப்போகிறீர்கள்? அவை ஈழத்து தமிழ் இலக்கியங்களல்ல. ஈழம் பற்றிய தமிழ் இலக்கியங்கள்.அது முத்துலிங்கத்திற்கும் பொருந்தும் அதேபோல எஸ்.பொன்னுத்துரை, வி. கந்தவனம், குறமகள், அரவிந்தன், ஷோபா சக்தி, ஜெயபாலன், சேரன், ஆழியாள் முதலான தமிழ் புலம் பெயர் இலக்கியம் படைக்கும் அனைவருக்கும் பொருந்தும். புதிய படைப்பாளிகள் அவர்களில் பலர் இன்று தாம் வாழ்கின்ற நாட்டில் அனுபவிக்கும் துயரங்களை எழுதி வருகின்றார்கள். எங்களுக்குப் பரிச்சயமில்லாத களமாக அவையுள்ளன. நெஞ்சைப் பிடித்துக் கொள்கின்றன. புலம்பெயர் தமிழ் இலக்கியம் இன்று எழுதுகின்ற பரம்பரையும் முற்றுப் பெற்றுவிடும். அதன் பின்னர் வரும். வருவது அந்தந்த நாட்டு மொழிகளில் ஈழத்துத் தமிழரின் வம்சாவளியினரின் எழுத்துக்களாக அமையும்.
ஜீவநதியின் தொடர்புகளுக்கு.
தொலைபேசி
0094775991949
0094776991015
தொலைநகல்
0094212263206
மின்னஞ்சல்
முகவரி
கலை அகம்
சாமணந்தறை
ஆலடிப்பிள்ளையார் வீதி
அல்வாய்
யாழ்ப்பாணம்

நிலக்கிளியும், காட்டுக்கதைகள் கொஞ்சமும்


அண்மையில் கானாப் பிரபாவின் வலைப்பதிவில் “நிலக்கிளி” பாலமனோகரனது பேட்டியை படித்த பின் வாய்த்தால் நிலக்கிளி நாவலை படிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நிலக்கிளி என்பது உயரப் பறக்காத , நிலத்தோடு அண்டிய பொந்துகளில் வாழும் ஒரு வகை கிளியினம் என பாலமனோகரன் அவரது பேட்டியில் குறிப்பிட்டிருந்தது, கதை தான் வாழ்ந்த தண்ணிமுறிப்பு கிராமத்தை களமாக கொண்டது என்பதும் என்னை கவர்ந்தது. ஏனெனில், காடு பற்றி அம்புலிமாமாக்களிலும், பாலமித்ராக்களிலும் மாத்திரமே அறிந்திருந்திருந்த என்னை அநுவை. நாகராஜனின் “காட்டில் ஒரு வாரம்” என்னும் நூல் இன்னும் அது பற்றிய சுவாரசியத்தை அதிகமாக்கின. "காட்டில் ஒரு வாரம்" நூல் சிறுவயதில் காட்டில் தொலையும் ஒரு சிறுவன் மான்கூட்டத்துடன் சேர்ந்து வளர்வதும், பின் அங்கு காட்டில் விடுமுறை கொண்டாட வந்த அவர்களது சகோதரர்களால் அவன் கண்டு பிடிக்கப்படுவதுமான கதையை கொண்டது.




அதே அனேக அம்புலிமாமா கதைகளில் காட்டு வழியால் செல்லும் போது பிசாசுகளும், பூதங்களும், பேசும் மிருகங்களும் வந்து மறித்துக் கொள்வது வழமையானது. இவையெல்லாம் சேர்ந்து காட்டை இரசியங்கள் மிகுந்த ஒன்றாக எண்ணத் தோன்றியது. அவை உண்மையில் தீரா ரகசியங்களுக்குரியனதான்.

அது தவிர காட்டைச் சார்ந்துள்ள கிராமங்களை பற்றி செங்கை ஆழியன் எழுதிய பல நூலைகளையும் எனது பதினைந்து வயதிற்குள்ளாவே படித்திருந்தால் காட்டுக்கிராமம் சார்ந்த நாவல் என்று சொல்லப்பட்ட நிலக்கிளியையும் அப்பால் தமிழில் வாசிக்க ஆரம்பித்தேன்.

வாசிக்க ஆரம்பித்ததும் நான் இந்த நாவலை முன்பு ஒரு முறை வாசித்திருப்பதான உணர்வு இருந்தது. அதற்கு சாட்சியாய் சில சொற்களும், சொற்றொடர்களும் என் மனசில் இன்னும் எஞ்சி இருந்தன.

இன்றைய காலத்திலோ இனி வரும் காலங்களிலோ இப்படியான களத்தை கொண்டு இன்னொரு நாவல் எழ வாய்ப்பில்லை எனவே நினைக்கின்றேன். ஈழத்தில் இல்லாமல் போனவைகளில் இதுவும் ஒன்று. நாவலில் வரும் முரலிப் பழத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் வீரைப்பழத்தை நிறைய சாப்பிட்டு இருக்கின்றேன். இன்னுமொரு பத்து வருடங்களில் வீரைப்பழம் என்றால் என்னவென்று தெரியாத தண்ணிமுறிப்பு சிறுவன் இருக்க கூடும். (சில வேளை இப்போது இருக்கலாம்)

நிலக்கிளியை முதலில் வாசித்ததை விட இப்போது அதை இன்னும் ஈடுபாட்டோடு வாசிக்க கூடியதாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில் இதனை நான் வாசித்த போது இது எனக்கு கொஞ்சம் இது ஓவர் டோஸ். அதாவது கதையில் வரும் பதஞ்சலிக்கு கற்பு , காதல் என்ற வசனங்களுக்கு அர்த்தம் புரியாதது போல எனக்கு சில செய்கைகளுக்கும், சொற்களுக்குமான அர்த்தம் புரியவில்லை. இரண்டாவது முன்பு நான் அதை வாசிக்கும் போது காடு எனக்கு கனவாய் இருந்தது. இப்போது நான் அதை வாசிக்கும் போது காட்டை எனக்கு தெரிந்திருந்தது.

உண்மையில் இந்த பதிவை நான் எழுத முனைந்தமைக்கு நிலக்கிளியின் தாக்கத்தை விட , அது என்னில் கிளறி விட்ட காடு பற்றி நினைவுகளே காரணம் என்பேன். ஓரிரு நாட்களில் நாங்கள் இடம்பெயர்ந்து காடுகளின் கிராமங்களிற்கு போகையில் எனக்கு தெரியாது, இன்னும் சில வருடங்களிற்கு எங்களின் வாழ்க்கை இங்குதான் கழியப்போகின்றது என்று. இடம் பெயர்ந்து நாங்கள் போன ஊரில் ஒரே ஒரு உறவாக எங்களின் மாமாதான் இருந்தார். அவர்தான் படித்த வாலிபர் திட்டத்திலோ, அல்லது “வெளிக்கிடடி விசுவமடுவிற்கு” நாடகம் பார்த்தோ அங்கு வந்தவராக இருப்பர் என நினைக்கின்றேன். வாழ்க்கையில் நான் கண்டிராத நீளக்காணியும், தீர்த்தக் கேணி போன்ற பெரிய கிணறுகளும், நாள் தோறும் இறைத்துக் கொண்டிருக்கின்ற நீரிறைப்பிகளும், படங்களில் பார்க்கும் அருவி போல் அவை ஓடி பிரித்து செல்கையில் பலவேறாக ஆட்கள் நின்று பாத்தி மாறுவதும் மறக்க முடியாத ஒன்றுதான். பத்தி மாறுவதற்கு நான் நீ என்று சண்டை போடுவோம். ஏனெனில் அந்த காணியில் அப்போது 75 பேருக்கு மேல் இருந்தோம். எல்லோருக்கும் இது புதிதுதான்.

நாங்கள் இடம்பெயர்வதற்கு முன்பு எங்களின் உறவினர் ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவர் இன்னொரு காட்டுக்கரை கிராமமான முத்தையன்கட்டில் இருந்தார். ஒரு முறை அவருக்கு கட்டுத்துவக்கு வெடித்து அவரை பெரியாஸ்பத்திரியில் வைத்திருக்கும் போது போய் பார்த்தோம். அவர் வரும் போது மரை வத்தலோடுதான் வீட்டுக்கு வருவார். அதே போல் அது பருவங்களையொத்து பாலைப் பழமாகவோ, தேனாகவோ நீளும். நாங்கள் இடம் பெயர்ந்து போன பின்பு அதே போல மான்களை பார்க்கவும், பாலைப்பழம் பிடுங்கவும் ஆசைப்பட்டேன். ஆனால் இது முத்தைஐயன் கட்டு அல்ல. அதற்கு முன்னால் உள்ள இரண்டும் கெட்டான். (இரண்டு கெட்டான் என்பது காடுகள் அப்படியே இருக்க, மனிதர்களிடையே கொஞ்ச வசதிகள், நீரிறைப்பிகள், உழவியந்திரம் என்று) அது இப்போது எங்களை போன்று வந்து குவிந்தவர்களால் முழுக்க கெட்டானாகி மான்கள் மறைய , மலேரியா என்னும் மிருகத்தைத்தான் பார்க்க முடிந்தது. ஆனால் நிலம் தழையத் தழைய இருக்கின்ற பாலைப் பழங்களை சொண்டுகள் இரண்டும் ஒட்டும் வரை சாப்பிட்டு இருக்கின்றேன். பிறகு வந்த இரண்டு வருடங்களில் ஆறு மணிக்கு யானை உலவுகின்ற அந்த வீதிகளில் எந்த இரவில் போனாலும் யானைகளை காணக்கிடைப்பதில்லை.(நாங்களெல்லாம் முறம் இல்லாமலே யானை விரட்டின ஆட்கள் ) என் சிறுவயது காட்டை அண்டிய கிராமத்து சில வருட வாழ்க்கை இன்னுமோர் பதிவிற்குரியது. இப்போது நிலக்கிளி பற்றி சொல்லப் புறப்பட்டு காட்டில் பாதை தவற விட்டவனாக எங்கோ வந்து தொலைந்து விட்டேன்.

நிலக்கிளியை வாசிக்க தொடங்கும் போதே இப்படி நீங்கள் அந்த நாவலினுள் தொலைந்து போவதை காணலாம். காட்டோடான சிறுவயது ஞாபகங்கள் எதுவும் உங்களிற்கு இருந்தால் அது இன்னுமதிகம் சாத்தியம். காட்டை, காட்டின் மிருகங்களை, அங்கிருக்கும் மனிதர்களின் மனங்களை, காட்டை வெல்லும் அவர்களின் மன உறுதியை மிக எளிய நடையில் சொல்வது அவ்வாறு சுயஅனுபவம் வாய்த்தவரை தவிர வேறு ஒருவரால் கடினமானது.

உதாரணமாக

"பூவாசலுக்கு மேல் கோறையாகச் செல்லும் பகுதியை இலேசாகத் தட்டிப் பார்த்தபின், மரத்தைத் தறிக்கத் தொடங்கினான். நாய்களிரண்டும் உடும்போ ஏதோவென்று உஷாராகிக் கொண்டன. 'கவனம்! பூச்சி குத்திப்போடும்!' என்று பதஞ்சலி கூறியதைக் கவனியாது அவன் குனிந்து, வெட்டப்பட்டிருந்த வெளியினூடாக வாயால் ஊதினான். அவன் ஊதவும் தேனீக்கள் தாம் மொய்த்திருந்த வதைகளைவிட்டு மேலே கொட்டுக்குள் போய்க் குவிந்து கொண்டன. அவன் கொட்டுக்குள் மெல்லக் கையைவிட்டு தேன்வதைகளை எடுத்தவாறே பதஞ்சலியை அருகில் அழைத்தான். வெள்ளை வெளேரென்று, இடியப்பத் தட்டுக்களைப்போல் வட்டவடிவமாக இருந்த அவற்றை எடுத்துப் பதஞ்சலியின் விரிந்த கைகளுக்குள் வைத்தான். தேன்வதைகளை அவள் கண்டிருக்கின்றாள். ஆனால் அவை இவ்வளவு ஒரே சீரான வட்டக் கட்டிகளாய் இருந்ததில்லை.

'இதைத்தான் பணியார வதை எண்டு சொல்லுறது' என்ற கதிராமன்"

என்ற வரிகளில் ஒரு நாய் , அதுவும் குறிப்பாக காட்டுப்புறத்திலே இருக்கும் நாய் திடீரென்று ஒரு திசையை நோக்கி அதன் முன்னிரண்டு கால்கள், காதுகள், கண்கள், மூக்கு என எல்லாவற்றையும் நேராக்கும். அப்படியே சிலை போல ஒரிரு நிமிடங்கள் நிற்கும். பின்பு அப்படியே மெதுவாக முதலில் கிண்டி வைத்த கிடங்கில் படுத்துவிடும். பாய்வதற்கு தயாராகுமே ஒழிய சரியான சந்தர்ப்பம் அமையாவிடில் பாயாது. ஆக அதன் வாழ் நாளில் தயாராகுதல் தான் அதிகம் நடக்கும். தேவையில்லாததற்கும் சேர்த்து. இது எங்களுக்கு ஞாபகம் இருக்குயொழிய சரியான வார்த்தைகளில், சரியான இடத்தில் சொல்ல வராது. அது அவருக்கு வந்திருக்கிறது.


பல இடங்களில் ஒரு காட்டுக்கிராம வாழ்க்கையை சொல்லும் பாலமனோகரன், புயல் அடிப்பதான ஒரு இடம் மட்டும் எனக்கு சற்று சினிமாத்தனமாக படுகின்றது. அங்கு நிகழ்கின்ற உடலுறவை சொல்லவில்லை. அது நிகழ்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவம்தான் அப்படியிருக்கின்றது.

ஆனாலும் நினைத்தாலும் கிடைக்க முடியாத அந்த வாழ்க்கை தொலைத்தவர்களிற்கு இன்னொரு முறை வாழ்ந்து பார்க்க இதுவொரு சந்தர்ப்பம் தான்
அட்டைப்பட உதவி - கானா பிரபா

நூலகத்தில் நிலக்கிளியை வாசிக்க

கானா பிரபாவின் வலைப்பதிவில் பாலமனோகரனின் பேட்டி

My Blog List