விசரர்களின் சூத்திரம் (சிறுகதை)

வீட்டுக்கு முன்னால் ஊரிப் பாதை போகின்றது. அனேமாக அது ஆளரவமற்று அமைதியாய்தானிருக்கும். மழை பெய்தால் அங்கிருக்கின்ற பள்ளங்களிலுள் தண்ணீர் தேங்கி நின்று வல்லிபுர கோவில் நாமம் போல கரைந்து இருக்கும். இடைக்கிடை கடந்து போகின்ற மாட்டுவண்டில்களின் சத்ததையோ , மத்தியான வெயிலுக்குள் ஊரி குத்த குத்த கள்ளுக் கொட்டிலுக்கு போக அவதிப்பட்டு நடக்கும் கால்களின் சத்தத்தையோ கேட்கலாம்.

இந்த வீதிக்கு அப்பால் மூன்று கிராமங்கள் இருக்கின்றன என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார். என்ன சனங்கள் இவர்கள் என எண்ணத் தோன்றும் படியாக காலையில் இருந்து மாலைக்குள் கடக்கும் பத்து பன்னிரண்டு மாட்டு வண்டில்கள், ஐந்தோ ஆறு மீன்காரிகள் , நல்ல தண்ணீருக்கு நடக்கின்ற ஒரு தொகை பெண்கள் கூட்டம். எப்போதாவது இருந்து விட்டு போகின்ற கூட்டுறவு சங்க லொறி. இவைகள் போதும் வருடம் முழுவதற்கும் என தலையை உள்ளே இழுத்துக் கொண்டிருப்பார்கள்.

வீட்டின் வாசல் படியில் இருந்து அப்படியே நேரே நோக்கினால் றோட்டை கடந்ததும் ஒரு தண்ணீர் பைப். அத்துளு குளத்தில் இருந்து நல்ல தண்ணீரை காலையில் கொண்டு வருவதுடன் அதன் வேலை முடிந்து விடும். அதற்கும் அப்பால் ஒரு மின்மாற்றி, மின்மாற்றி மறைவில் பிள்ளையார் கோயிலுக்காக ஒரு சின்ன பூந்தோட்டம். அதற்கு தண்ணீர் பின்னால் இருக்கும் பாதிக் கிணற்றில் இருந்து வருகின்றது. அதற்கும் அப்பால் ஒரு வாசிக சாலை.

வீட்டின் படியின் மூலைப்பாடாய் குண்டியை வைச்சு இருந்தால் மின்மாற்றியை முழுதாயும், பூந்தோட்டத்தை கால் வாசியாயும், வாசிகசாலையை அரைவாசியையும் பார்க்கலாம். முழுதாய் கண்ணில் இருந்து மறைவது அந்த பாதிக்கிணறுதான். மீதிக்கிணறு மயில்வாகனத்தாரின் காணிக்குள் இருந்தது. கிணற்றை பாதியாய் பிரித்து மதில் ஓடியது. வாசிகசாலையும் தண்ணீர் பைப்படி போல காலையில் அமர்க்களப்படும். அல்லது அதன் அமர்க்களம் ஞாயிற்றுகிழமை வீரகேசரியில் தான் தொடங்கும்.

வீதியின் வலது புறமாய் ஏராளம் வீடுகள். அனேகமான சொந்தகாரர் வீடுகள். அனேகம் என்ன ஏறத்தாழ முழுவதுமே. சசி மாமி வீடுவரைக்கும் அது. இடது பக்கமும் அப்படித்தான்.

அவன் இந்த ஊரில் பிறந்து தவழ்ந்து வளர்ந்தவனல்ல. மாறாக அவனது அப்பாவும் அம்மாவும் இது மூன்றையும் இன்னும் ஒன்றை மேலதிகமாக தங்களின் கலியாணத்தையும் இந்த ஊரிலே செய்து இருந்தனர். அப்படித்தான் அவனுக்கும் இது ஊராகியது. நினைவு புலப்படும் பொழுதுகளில் இருந்தே பள்ளி விடுமுறைக்கு அப்பாவின் யமாஹாவில் பின்னால் ஓட்டியபடி வந்த சில நாட்களிலே இந்த ஊர் பிடிக்கமால் போய்விட்டது. அந்த வயதில் அவனுக்கு இந்த ஊர் பிடிக்கமால் போக தத்துவார்த்த காரணமா அவனுக்கு இருக்க முடியும்?. இல்லாவிட்டால் என்ன சின்னப்பிள்ளைகளை போல பாழாய் போன பேய்தான் அவனின் பயத்திற்கு காரணம் என கண்டு பிடித்தது சொன்னாலும் அது அவனின் விசயத்தில் முதலில் பிழை.

அவன் அந்த ஊரில் முதலில் பயந்தது பேய்க்கு அல்ல. மாறாக சிவசேனத்திற்கு. ஊருக்கு வந்த காலத்தில் இருந்தே எதற்கெடுத்தாலும் சிவசேனம் சிவசேனம் என்று சொல்லிச் சொல்லியே சிவசேனத்தை கூட்டி வந்து விட்டனர் அந்த ஊர்க்காரர். மக்கள் இப்படி எதிர்பார்த்து இருக்கும் சிவசேனம் என்ன அந்த ஊரின் எம்.பி யா? இல்லவே இல்லை. சிவசேனம் தான் அந்த ஊர் சார்பில் வடமராட்சியெங்கும் திரியும் ஒரே ஒரு விசரி.

சாம்பலை தூவி விட்டது போல் மெல்ல இருள் படரும் ஒரு மாலைப் பொழுதில் தேசிமரத்தில் கீழ் மண்ணை கூட்டி குவித்து எகிப்திய பிரமிட் எழுப்ப முயன்ற அவனை “சிவசேனம் வந்திட்டாள்” என்ற குரல் தூக்கி எறிந்து மேல் மாடி அறையில் போட்டது. வீட்டின் முன்கதவை யார் சாத்தினார்கள்? கேற்றை யார் பூட்டினார்? அவனோடு இருந்த மற்ற பெடியன் என்ன ஆனார்கள்? வாசிக சாலையில் நின்றிருந்தவர்கள் எங்கே போயினர் என்று அவனுக்கு எதுவுமே தெரியாது. விசர்களுக்கு அதிக பலம் இருக்கும் என்றும் சிவசேனத்திற்கு அதை விட அதிக பலம் என்றும் தேவன் அண்ணா அடிக்கடி சொன்னது அவனை இப்போது பூட்டி இருந்த அறைக்கதவின் பலத்தில் சந்தேகம் கொள்ள வைத்தது. அப்போதுதான் பார்த்தான் அவன் காலுக்கு கீழே அவன் தங்கச்சி சிணுங்கிய படியிருந்தாள். “சிணுங்காதையடி சத்தம் கேட்டு சிவசேனம் வரப்போறாள்” என்ற அதட்டலின் பின்னர் அவள் சிணுங்கலை வெறும் அணுங்கலாக மாற்றினாள். இவன் பூட்டப்பட்டிருந்த யன்னல் கண்ணாடியால் மெல்ல எட்டி பார்த்தான். சிவசேனம் தண்ணீர் பைப்படியில் நின்றிருந்தாள். கட்டையாக, ஒரு சைனா மஞ்சள் நிறத்தில் உப்பலும் இல்லாத, மெலிவு இல்லாத தோற்றம். அவள் இடுப்பில் கை வைத்து றோட்டின் இரு கரையிலும் தலையை கம்பீரமாக நிமிர்த்தி ஒரு ராஜகுமாரி போல பார்த்தாள்;. சடரென்று அவள் கழுத்தில் இருந்து முழங்கால் வரை தொங்கிய ஒரே ஒரு நைந்து போன ஆடையை அநாயசமாய் கழற்றி மின்மாற்றி ஓரமாய் எறிந்து கணத்தில் அதிரூப சுந்தரியனாள். இவன் அப்போது ரைரனிக் படத்தை பார்க்கவில்லை என்பதால் அவள் எதற்கு அப்படி நிற்கிறாள் என்று முகட்டை பார்த்து யோசிக்க வெளிக்கிடும் போது...சிவசேனம் அந்த ஆடையை தான் பிறந்த மண்ணுக்கே கொடுத்து விட்டு கோயில் வீதியால் கடந்து மறைந்தாள்.

அதற்கு பிறகு அவன் ஊருக்கு போவதில்லை என்று ஒற்றைக் காலில் நின்றான். ஆனால் நெல்லுக்கட்ட ஊருக்கு வந்த ஆனந்தமாமா சிவசேனத்தை இந்தியன் ஆமி சுட்டுப் போட்டுதாம் என்று அம்மாவிற்கு சொல்வதை கேட்ட பின்னர் தான் ஊருக்கு போக சம்மதித்தான். அதுவும் இந்த முறை விடுமுறைக்கல்ல. இனி நான் படிக்க போகும் எட்டு வருடங்களையும் அங்கிருந்து படித்து அவனை ஒரு டாக்குத்தன் ஆக்க வேண்டும் என்று அப்பம்மாவில் இருந்து, இன்னும் யார் யாரோ எல்லாம் ஆசைப்படுவதாக வந்து சொல்லி அவனை பெட்டி படுக்கையோடு ஊருக்கு அனுப்பி விட்டனர்.

ஊரின் வீடு அப்பப்பா நெல்லுக்கட்டியும், யாழ்ப்பாணத்தில் லேக் வியூ ஹோட்டல் வைத்து சேர்த்த காசில் கட்டிய பெரிய வீடு. அவனும் அப்பம்மாவும் மாத்திரமே இப்போது அந்த வீட்டில் என்பதால் ஓரிரண்டு அறைகள் தவிர மிகுதி எல்லா அறைகளும் பூட்டி இருந்தன. பூட்டி இருந்த அறைகளுக்கு அப்பப்பா பாவித்த பொருட்களும் புத்தகங்களும் இன்ன பிற பொருட்களும் நிறைந்திருந்தன.

சுவாமி அறை மேல் மாடியில் இருந்தது. படிக்கும் பிள்ளை என்பதால் இவனே மாலையில் சுவாமி படத்திற்கு விளக்கு வைக்க வேண்டி இருந்தது. அந்த சுவாமி அறையில் அப்பப்பாவின் படம் ஒன்று இருக்கும். அந்த படத்தில் இருக்கும் அப்பப்பாவின் கண்கள் அந்த அறையில் எங்கு நின்றாலும் அவனையே பார்ப்பது போன்று இருக்கும். அப்பம்மாவிடம் இது பற்றி சொல்லும் போது “அவருக்கு உன்னில் நல்ல விருப்பம் அதுதான் உன்னையே பார்க்கிறார்” எண்டு சொன்னா.

அதற்கு பிறகு அவன் இரவில் ஆங்கிலமும் கணிதமும் கேட்டு படிக்க தேவன் அண்ணை வீட்டை போனான். தேவன் அண்ணை அவனின் சொந்தக்காரர்தான். தேவன் அண்ணையின் எல்லா சகோதரங்களும் நல்ல கெட்டிக்காரர்கள் என்பதை அப்பம்மா அறிந்தபடியினால் அவாவவும் சந்தோசமாய் அங்கு படிக்க போவதை ஏற்றுக்கொண்டா. ஆனால் அவன் அங்கு டாக்குத்தன் ஆகாது போனதற்கு காரணங்கள் பல இருந்தாலும் ஈழம் ஒரு வீரனை இழந்ததற்கு அங்குதான் அத்திவாரம் போடப்பட்டது. இப்படி அத்திவாரத்தை போடக்கூடிய ஒரு விசயத்தை தேவண்ணை விஞ்ஞான பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கும் போது அவனிடம் சொன்னார்.

“கொப்பப்பாவை எங்க இன்போம் பண்ணினது தெரியுமோடா உனக்கு?முதலி அறைக்கு பின்னால் இருக்கிற கொட்டில் பக்கமாய் பார் ஒரு புட்டி இருக்கும் அங்க தான் அவரின்ர குடலை எடுத்து தாட்டது. நான் தானே கிடங்கு வெட்டினான்” என்று நீளமாய் சொல்லி விட்டு சொன்னார் "கவனமடா கொப்பப்பா உதுவழிய திரிவார். இரவில் உன்ர வீட்டை விட்டு வெளியில் இறங்கதை” என்னும் போது..இவன் அவசரமாய் இடை மறித்து "அப்பம்மா சொன்னவா அப்பப்பா என்னில் நல்ல விருப்பம் எண்டு அவர் என்னை ஒண்டும் செய்ய மாட்டார்" என்றான்.

தேவண்ணை ஒரு மாதிரி தலையை வைச்சுக் கொண்டு ஒரு உலுப்பலோடு சொன்னார். “அது தானடா விருப்பமான ஆட்களை பிடிக்கதானே அவர் வருவார்”

தேவண்ணை சொல்வது உண்மையாக அவனுக்கு பட்டது. எப்பக்கம் போனாலும் திரும்பி பார்க்கும் அப்பப்பாவின் கண்களும், அவன் கதைத்தால் அதையே திருப்பி பத்து தரம் திருப்பி சொல்லும் அந்த வீட்டு சுவர்களும் அதை உண்மை என்று சொல்லின. இரவில் இவன் அப்பம்மாவின் சீலை தலைப்பை பிடிச்சு கொண்டே திரிஞ்சான். இரவில் படுத்திருக்கும் போது திடீரென்று முழிப்பு வந்தால் அப்பம்மாவை காணக் கிடைக்காது. இவன் அப்பம்மா என்று குழறுவான். அந்த வீட்டு சுவர்கள் அந்த சத்தத்தை பல மடங்கு அதிகரித்து எண் திசைகளாலும் அவன் காதை நோக்கி குவிக்க தொடங்க இவன் வீட்டை வி்ட்டு வெளியேற தலைதெறிக்க ஓடி சின்னி விரல் கதவு விளிம்பில் அடி பட்டு இரத்தம் ஒழுக வெளியே வந்தால் அப்பம்மா தலையில் பனிக்கு சீலை போர்த்தபடி பின்காணியில் பொறுக்கிய பனங்கொட்டைகளை கையில் கொண்டு வருவா.

அவனுக்கும் அப்பம்மா தனக்கு பாதுகாப்பு தருவா என்ற நம்பிக்கை விட்டு போச்சு. அதனால் அவன் தேவண்ணை வீட்டில் கிடையாய் கிடந்தான். அப்படித்தான் ஒரு முறை பகல் பொழுதொன்றில் தேவண்ணை வீட்டில் இருக்கும் போது கேற்றை யாரோ தட்டி கேட்டது. திடீரென்று “யோகன் மாமா வந்திட்டார்” என்று மெல்ல குழறுவது போலான சத்தம் கேட்டது. இவனுக்கு முன்னொரு முறை தேசிமரத்திற்கு கீழ் நிற்கும் போது கேட்ட சத்தத்தை போல உணர்ந்தால் மழைக்கு ஓடி ஒளியும் ஆட்டுக்குட்டி போல் தேவண்ணையின் சாரத்திற்கு பின்னால் ஒளிந்தான்.

வந்தது யோகன் எனப்படும் யோகன் மாமா. ஒரு வகையில் எங்களுக்கெல்லாம் சொந்தகாரர். எங்களுரில் தற்போது இருக்கும் விசர்களில் ஒருவர். பழக்கம் இல்லாதவை தவிர மற்ற ஆட்களும் எப்படி நடப்பார் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலை. ஆகவே அவரை கையாள தேவண்ணையின் அம்மாவால் மட்டுமே அது முடியும். “அக்கா பசிக்குது” என்று குரலுக்கு “வா யோகன்” என்று குரல் மட்டும் அவருக்கு போதுமானது. இவர்கள் யாராவது சிரித்தாலோ சொறிந்தாலோ கற்கள் எங்களை நோக்கி வரும் என எச்சரிப்பட்டு இருப்பதினால் அவருடன் யாரும் கதைத்ததே இல்லை. ஆனால் அவனுடைய கணீப்பீட்டின் படி சிவசேனத்தினுடன் ஒப்பிடுகையில் அவர் ஒரு “ஒரு நல்ல விசர்”.

ஒரு நாள் ஞாயிற்று கிழமை. இவன் வாசிக சாலையில் வீரகேசரி வாசித்து விட்டு நிமிர்ந்தால் இவன் இருக்கும் அந்த நீண்டு வாங்கிலின் முடிவில் யோகன் மாமாவும் இருக்கிறார். அவர் படிப்பது ஆங்கில பத்திரிகை. பள்ளிக்கூட சைக்கிள் ஓட்டப்போட்டியில் கீழே விழுந்து விசராக்கியதாய் சொல்லப்படும் ஹாட்லியில் படித்த மிகத்திறமையாலிகளில் ஒருவர் அவர் என்று சொல்லப்படுவது உண்மைதான் போலிருந்தது. இப்போது வாங்கில் சுவரோடு ஒட்டி போடப்பட்டிருந்து. மறுபக்கம் பெரிய மேசை. இவன் வெளியே போக வேண்டுமானால் யோகன் மாமா எழுந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அவர் போக மட்டும் அப்படியே இருக்க வேண்டும். சில வேளை மறுநாள் காலை வரை அவர் அதிலிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நடப்பது நடக்கட்டும் என இவன் அவருடன் கதைக்க ஆரம்பித்தான்.

“யோகன் மாமா நீங்கள் ஹாட்லியில் தானாம் படிச்சனீங்கள்”
“yes”

நானும் ஹாட்லியில தான் படிக்கிறன்

“thats good”

நீங்கள் படிக்கும் போது யார் பிரின்சிபல்?

Mr.பூர்ணம்பிள்ளை..

ஓ..இப்ப poornampillai block இல் தான் library இருக்கு..

oh...really..?

“நான் ரியூசனுக்கு போக வேணும் யோகன் மாமா நீங்கள் கொஞ்சம் எழும்பினால் நான் உதல போகலாம்..”

sure..u can go..


இவனுக்கு அப்படா என்றிருந்தது...யோகன் மாமாவோட கதைச்சதை தேவண்ணைக்கு சொல்ல வேணும் என்றும் நினைத்துக்கொண்டான்.


அதற்கு பிறகு வலிகாம சனம் ஊருக்கு வந்து நிறைய தொடங்கி கொஞ்ச நாளில் ஊரில் இருந்தும் சனம் இடம்பெயர தொடங்கினர். அப்பம்மா ஊரை விட்டு வரமாட்டன் என்று ஒரேயடியாய் இருந்ததினால் அப்பா இவனை மட்டும் வந்து கூட்டிக் கொண்டு போனார். ஊரை ஆமி சூழ்ந்து கொண்டது.

ஏழு வருடம் கழித்து சம்பந்தர் தனியாகவோ அல்லது அப்பரும் சேர்ந்துதானோ என்னவோ பாடிய தேவாரத்தின் காரணமாகவே யாழ்ப்பாணத்தின் கதவு திறந்து கொண்டது. பழையபடி ஆனந்தமாமா நெல்லுக் கட்ட லொறியுடன் வந்து முதற் செய்தியாய் “யோகனையெல்லோ திக்கத்தில் வைச்சு ஆமி சுட்டு போட்டுது” என்று சொன்னார். அவனுக்கு திக்கென்று இருந்தது. அந்தாளை ஏன்? அதுவும் அந்தாள் ஒரு “நல்ல விசர்”

பாதை திறந்து எல்லோரும் ஓடுப்பட்டு திரிய அவனுக்கும் ஊருக்கு போகும் ஆசை மீண்டும் வந்தது. ஊர் மாறவே இல்லை. ஆனால் ஒன்று ஊரிப்பாதையை மூடி இப்போது தார் றோட்டும் அதில் திரிய கொஞ்ச மோட்டார் சைக்கிள்களும் வந்திருந்தன. மற்றும் படி வாசலில் படியில் குண்டியை வைச்சால் முதற் பந்தியில் சொன்ன அவ்வளத்தையும் இப்பவும் பார்க்கலாம்.

வீட்டிற்குள் திரியவும் அவனுக்கு இப்போது பயம் இல்லை. “அப்பம்மா” என உரத்து கத்தி அது எதிரொலிப்பதை கேட்டு ரசித்தான். இருட்டிக்கொண்டு வரும் ஒரு நேரத்தில் தேவண்ணை வீட்டுக்கு போனான். தேவண்ணை வெளியில் போயிருப்பதாக சொன்னார். அவர்கள் வீட்டிலும் ரிவிகள், மோட்டார் சைக்கிள்கள் என வந்திருந்தது. கொஞ்ச நேரத்தில் வாசலில் ஆளரவம். திரும்பி பார்த்தால் தேவண்ணை நின்றிருந்தார். “என்ன தேவண்ணை என்னை தெரியுதோ” என கேட்டதற்கு “ஓஓஓ” என்று கிட்டத்தட்ட எல்லா பல்லும் தெரிய சிரிச்சபடி சொல்லிக் கொண்டு கதிரையில் இருந்து முகட்டை பார்க்க தொடங்கினார். என்ன தேவண்ணை பேசமால் இருக்கிறீயள் கதையுங்கோவன் என இவன் கேட்ட போது முகட்டில் இருந்து தலையை இறக்கி இவனைப் பார்த்து சிரித்து விட்டு திருப்பி ஏற்றினார். பக்கத்தில் இருந்த இவனது தங்கச்சி காலை மிதித்து காதுக்குள் குசுகுசுத்தாள் “அவருக்கொரு மாதிரியெடா”

10 comments:

said...

கோசலன் என்ற பெயரை நான் கவனிக்காது போயிருந்தேன். 'பேனா - பிசாசு தான் நினைவில் நின்றது. தற்செயலாக வந்தால்... அது நீங்கள். கதை நடை நன்றாக இருக்கிறது. இரண்டு இடங்களில் தேவன் அண்ணா 'நாதனாக'ஏன் மாறியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவில்லை.
நீங்கள் ரஞ்சகுமாருடைய சிறுகதைகள் வாசித்திருக்கிறீர்களா? அவருடைய ஒரு கதைக்கும் 'கோசலன்' அல்லது 'கோசலை'என்று பெயர் என்று நினைக்கிறேன். அவரின் சாயலை, தரத்தை உங்கள் எழுத்தில் கண்டேன். நிறைய எழுதுங்கள் பேனா - பிசாசு. பெயரில் மட்டும் பேய் இருந்தால் போதாதென்றா கதைமாந்தர்(பிழைதான்) களாகவும் உலவவிட்டிருக்கிறீர்கள்:)

said...

வணக்கம் கோசலன் ...நல்லாயிருக்குது சிறு கதை நடை பாராட்டுக்கள் ...தொடர்ந்து எழுதுங்கள்

said...

தமிழ்நதி
முன்னைய இரண்டு இடுகைகளுடனும் பேனா - பிசாசு என்றிருந்ததை கோசலன் என்றே மாற்றிவிட்டேன். அத்துடன் கதையில் எல்லா இடத்திலும் உண்மையான பெயர்களிலேயே எழுதி வந்து இறுதியில்தான் மாற்றினேன். அப்படி மாற்றுகையில் இரண்டு இடத்தில் அது தவறிவிட்டது. இப்போது மாற்றிவிட்டேன். ரஞ்சகுமாரின் கதைகளை பலதடவைகள் வாசித்து இருக்கிறேன். அவருடைய "மோகவாசல்" தொகுப்பில் நீங்கள் சொன்னது போல் "கோசலை" என்றொரு சிறந்த சிறுகதை வந்திருக்கின்றது.

சில வேளை அவருடைய கதைகளை விரும்பி வாசித்த காரணத்தினால் அந்த சாயல் தோன்றி இருக்கலாம். எனினும் அதை போல் தரமாய் தென்படுவதாக "நீங்களே" கூறிவிட்டதால் எனக்கு கொம்பு முளைக்க பார்க்கிறது :)

//நிறைய எழுதுங்கள் பேனா - பிசாசு. பெயரில் மட்டும் பேய் இருந்தால் போதாதென்றா கதைமாந்தர்(பிழைதான்) களாகவும் உலவவிட்டிருக்கிறீர்கள்:)//

ஹிஹி இதுக்கு நான் என்னத்தை சொல்லுறது :)

said...

சின்னக்குட்டி,
பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

said...

நல்ல கதை... தொடர்ந்து எழுதுங்கள்... எழுத்து நடை சிறப்பு... என் பதிவின் பக்கம் தலை காட்டியதற்கு நன்றி.

said...

நன்றி விக்னேஸ்வரன்

Anonymous said...

அன்புள்ள பிசாசு..:)

எழுத்து நடையும் கதையும் தரமாக உள்ளது.

"சாம்பலை தூவி விட்டது போல் மெல்ல இருள் படரும் ஒரு மாலைப் பொழுதில் தேசிமரத்தில் கீழ் மண்ணை கூட்டி குவித்து எகிப்திய பிரமிட் எழுப்ப முயன்ற"

போன்ற வரிகளில் கவிதைத் தன்மை பளிச்சிடுவதும் கதையை மேலும் அழகு படுத்தியுள்ளது.

தொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
பஹீமாஜஹான்

said...

வணக்கம் பஹீமா அக்கா,
உங்களின் பாராட்டு நன்றி. இனிமேல் எழுதுவதை கூட உங்களை போன்றவர்களிடம் இருந்து இதே போன்ற பாராட்டுக்களை பெறக் கூடியவாறு எழுத வேண்டுமே என்பதுதான் எனக்கு இப்போதுள்ள கவலை :)

said...

வாவ்.. நல்ல சிறுகதை கோசலன். அருமையான நடையில் சொல்லியிருக்கின்றீர்கள். வர்ணனைகளும் பிரமாதம்.

//பழக்கம் இல்லாதவை தவிர மற்ற ஆட்களும் எப்படி நடப்பார் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலை.//
:)) உண்மைதான்.

நீங்கள் இன்னும் எழுத வாழ்த்துக்கள்..!

said...

//வாவ்.. நல்ல சிறுகதை கோசலன். அருமையான நடையில் சொல்லியிருக்கின்றீர்கள். வர்ணனைகளும் பிரமாதம்.//

இந்த "வாவ்" மட்டுமே எனக்கு அருமையான "கிக்கை" தருது இன்னொரு சிறுகதை எழுத.. நன்றி

My Blog List